கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை ஜூன் 9 ல் திறப்பு?
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கார் பருவசாகுபடிக்கு
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.கார் பருவசாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து இம்மாதம் 9 ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை தொங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 6 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 8 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 13.8 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 3 மி.மீ மழையும் பெய்துள்ளது.கடனாநதி அணையில் 3 மி.மீ மழையும், ராமநதி அணையில் 4 மி.மீ மழையும்,அம்பாசமுத்திரத்தில் 3.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 600 கனஅடி நீர்வரத்து இருந்தது.இதேபோல் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 1.15 அடி உயர்ந்து 50.55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 64.80 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 28 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தாமிரவருணி ஆற்றில் 200 கனஅடியும், மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்திற்கு 75கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கடனாநதி அணைக்கு விநாடிக்கு 17 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 29கனஅடியும் நீர்வரத்து இருந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 32.00 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 1.65 அடி உயர்ந்து 41.65அடியாகவும் இருந்தது.இவ்விரு அணைகளில் இருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, ராமநதி அணைகளுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. ஆகவே கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே கார் பருவ சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் எனபொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அரசின் அனுமதி கிடைத்ததும் இம் மாதம் 9 ம் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.