ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்
சிதம்பரத்தில் கடத்தப்பட்ட 18 மூட்டை ரேஷன் அரிசி 10 மூட்டை அரிசி மாவும் சிதம்பரம் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் இன்று ரைஸ்மில் ஒன்றில் திடீர் சோதனை
சிதம்பரத்தில் கடத்தப்பட்ட 18 மூட்டை ரேஷன் அரிசி 10 மூட்டை அரிசி மாவும் சிதம்பரம் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் இன்று ரைஸ்மில் ஒன்றில் திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.
சிதம்பரத்தில் ரேஷன் அரிசியை கடத்தி ரைஸ்மில்லில் அரைத்து மாவாக்கி விற்பனை செய்வதாக சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியத்திற்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் குடிமைப் பொருள் வட்டாட்சியர் பழனி மற்றும் வருவாய்த்துறையினர் சிதம்பரம் வானக்காரத்தெருவில் உள்ள ராஜலட்சுமி ரைஸ்மில்லை வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டார். சேலத்தை சேர்ந்த முருகன் (26) என்பவர் இந்த ரைஸ்மில்லை குத்தகைக்கு எடுத்து கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருகிறார்.
உதவிஆட்சியர் ரைஸ்மில்லை சோதனையிட்ட போது அங்கு மாவாக அரைக்க கடத்தி கொண்டு வரப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 18 மூட்டைகள் ரேஷன் அரிசியும், மாவாக அரைக்கப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகள் அரிசி மாவும் உள்ளது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் மாவு மூட்டைகளின் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை குடிமைப் பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. வருவாய்த்துறையினர் விசாரணையில் வேங்கான்தெருவைச் சேர்ந்த சேகர் என்பவர் ரேஷன் அரிசியை கடத்தி ரைஸ்மில்லுக்கு கொண்டு வந்து கொடுத்தது தெரியவந்தது அவரை தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை உணவு தடுப்பு பிரிவு போலீஸார் ரேஷன் அரிசியை பிடித்து வந்த வேளையில், வருவாய்த்துறையினரே மிகப்பெரிய அளவிலான ரேஷன் அரிசி கடத்தலை பிடித்துள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.