எம்பிபிஎஸ் கூடுதல் இடங்களுக்கு தனியாக கலந்தாய்வு : சுகாதாரத் துறை செயலாளர்
சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கூடுதல் மாணவ சேர்க்கை இடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட கூடுதல் மாணவ சேர்க்கை இடங்களுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுரியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்ய புது தில்லியில் இருந்து வந்த மருத்துவக் கவுன்சில், சில நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கியது.
அவர்கள் கல்லூரியில் உள்ள நூலக வசதி உள்ளிட்ட சில குறைகளை சுட்டிக்காட்டி இருந்தனர். அவர்கள் கூறிய குறைகள் களையப்பட்டு விட்டதா, பணிகள் முடிந்ததா என்று ஆய்வு நடத்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தார்.
ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள், ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 85 இடங்கள் என தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மொத்தமாக 285 இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், கூடுதல் இடங்கள் அளிக்கப்பட்டுள்ள கல்லூரிகளில், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை சரி செய்த பிறகு, மீண்டும் தில்லியில் இருந்து மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பிறகுதான், இறுதி ஒப்புதல் அளிப்பார்கள்.
இந்த இறுதி ஒப்புதல் கிடைத்த பிறகே கூடுதலாக இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட 285 இடங்களுக்கு மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும். எனவே, தற்போது நடைபெற்று வரும் மருத்துவக் கலந்தாய்வில், இந்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இதற்கான கலந்தாய்வு அறிவிப்பு தனியாக வெளியிடப்பட்டு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ராதாகிருஷ்ணனுடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் சிங்லே, மருத்துவக் கல்லுரி முதல்வர் சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.