முகப்பு
தற்போதைய செய்திகள்

குடும்பத் தகராறு: 5 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

வேம்படிதாளம் அருகேயுள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறித் தொழிலாளி சிவக்குமார் (35). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களது குழந்தைகள்

Updated On : 1 மார்ச், 2013 at 6:03 PM
பகிர்:

சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே குடும்பத் தகராறு காரணமாக 5 வயது மகளை ரயில் முன் தள்ளி கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வேம்படிதாளம் அருகேயுள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறித் தொழிலாளி சிவக்குமார் (35). இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களது குழந்தைகள் அருண்குமார் (10), மதுபாலா (5). இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.இந்த நிலையில் சிவக்குமாருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று அதிகாலை தம்பதியரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜேஸ்வரி, தனது குழந்தைகளுடன் எடப்பாடியில் உள்ள தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.அய்யம்பாளையம் அம்மன் கோயில் அருகேயுள்ள சேலம் - ஈரோடு ரயில் தண்டவாளம் பகுதிக்குச் சென்ற ராஜேஸ்வரி, எதிரே ரயில் வருவதைக் கண்டதும் அருண்குமாரைப் பிடித்து தண்டவாளத்தில் தள்ளியுள்ளார். ஆனால் அருண்குமார் அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தைத் தாண்டிச் சென்றுவிட்டான். இதையடுத்து மதுபாலாவை கையில் பிடித்தபடி ராஜேஸ்வரி ரயில் முன் பாய்ந்துள்ளார்.இதில் இருவரும் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். சிறுவன் அருண்குமாரின் கதறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் ஈரோடு ரயில்வே காவல்துறையினரின் எல்லைக்குள்பட்டது என்பதால் இது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

சடலங்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.