சிதம்பரத்தில் காவலர் மீது தாக்குதல் : இருவர் மீது வழக்குப் பதிவு
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஏஎஸ்பியின் ஜீப் ஓட்டுநராக உள்ள காவலர் தாக்கப்பட்ட வழக்கில் நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் ஏஎஸ்பியின் ஜீப் ஓட்டுநராக உள்ள காவலர் தாக்கப்பட்ட வழக்கில் நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் உள்ளிட்ட இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் தாலுக்கா காவல் நிலைய காவலராக பணியாற்றுபவர் ரமணி. இவர் தற்காலிகமாக ஏஎஸ்பி ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காவலர் ரமணி தனது உறவினர்களை காட்டுமன்னார்கோயில் பேருந்தில் ஏற்றிவிட திங்கள்கிழமை இரவு பஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது பஸ்ஸில் மூன்று பேர் இருக்கையில் அமர்ந்திருந்த தினேஷ்குமார் என்ற இளைஞரை மாறி உட்காரும்படி கேட்டார். அப்போது அந்த இளைஞருக்கும், காவலர் ரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், தினேஷ்குமார் காவலர் ரமணியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் காவலர் ரமணியை மிரட்டி, தினேஷ்குமாரை தப்பிச்செல்ல விட்டனர். இதுகுறித்து காவலர் ரமணி கொடுத்த புகாரின் பேரில் நகர போலீஸார் தினேஷ்குமார், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.