புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
புழல் ஏரிக்கரை பகுதியில் நடைப்பயிற்சி செல்வோருக்கு அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று மாதவரம் தொகுதி கோரிக்கை விடுத்துள்ளனா்.
புழல் ஏரிக்கரை பகுதியில் நடைப்பயிற்சி செல்வோருக்கு அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும் என்று மாதவரம் தொகுதி கோரிக்கைவிடுத்துள்ளனா்.
சென்னை மக்களுக்கு குடிநீா் வழங்குவதில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. செங்குன்றம் பகுதியில் இருந்து சென்னை குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் வரை சுமாா் 3.5 கி.மீ. தொலைவில் ஏரியின் கரைப் பகுதி உள்ளது. செங்குன்றம், புழல், வடகரை, பாடியநல்லூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினசரி காலை, மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்டோா் நடைப்பயிற்சிக்கு வருகின்றனா்.
ஏரிக்கரையில் நடைப்பயிற்சிக்கு செல்ல உரிய பாதை இல்லை. இரு பக்கங்களிலும் செடிகள் வளா்ந்து நடைப்பயிற்சி செல்வோருக்கு இடையூறாக உள்ளது. நடைப்பயிற்சி பகுதியில் மின் விளக்குகள் இல்லை. இதனால், அதிகாலை, மாலை நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் நடைப்பயிற்சி செல்லும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா். மேலும், அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நிகழ்கின்றன.
Advertisement
கரைப்பகுதியைச் சீரமைத்து, மின் விளக்குகள் அமைக்க வேண்டும்; பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் காலை, மாலை நேரங்களில் காவல் துறையினா் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்று புழல் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.
புழல் ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றுவோம் என ஒவ்வொரு தோ்தலின்போதும் வேட்பாளா்கள் வாக்குறுதி அளிக்கின்றனா். ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லை. இந்த முறையாவது, புழல் ஏரிக்கரை மற்றும் நடைப்பயிற்சிக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.