முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விசைத் தெளிப்பான்

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் அனைத்து விதமான வேளாண் கருவிகள் தருவதற்காக தமிழக அரசு ரூ.1.26 கோடி மானியம் தந்தும், அதைப்

Updated On : 5 மார்ச், 2013 at 11:41 AM
பகிர்:

விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் விசைத் தெளிப்பானை வழங்கினார் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார உதவி வேளாண் பொறியாளர் ஈ.சங்கரசுப்பிரமணியன்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் அனைத்து விதமான வேளாண் கருவிகள் தருவதற்காக தமிழக அரசு ரூ.1.26 கோடி மானியம் தந்தும், அதைப் பெற்றுச் செல்ல மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் முன்வரவில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண் பொறியியல் துறையின் வட்டார உதவி வேளாண் பொறியாளர் ஈ.சங்கரசுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள் வழங்கும் விழா செவ்வாய்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி வேளாண் பொறியாளர் ஈ.சங்கர சுப்பிரமணியன் விவசாய இடுபொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் 2012-13-ம் நிதியாண்டில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழக அரசு விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் விவசாயகக் கருவிகள் வழங்க உத்தரவிட்டு அதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு மானியத் தொகையாக ரூ.1.26 கோடி ஒதுக்கீடு செய்தது.

Advertisement

இந்த மானியத் தொகையைக் கொண்டு, விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு கதிரடிக்கும் இயந்திரம், களையெடுக்கும் கருவி, விசைத் தெளிப்பான்கள், கைத் தெளிப்பான்கள், விசைக் களையெடுப்பான்கள், நெல் நடவு இயந்திரம், மினி டிராக்டர், பவர் டில்லர் கலப்பைகள் மற்றும் பலவிதமான கருவிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண் பொறியியல் துறை மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 60 சதவீத மானிய விலையிலும் வழங்கி வருகிறது.

இதில் விசைத் தெளிப்பான் வாங்குவதற்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் மானியம் தமிழக அரசு தருகிறது. மாட்டுத் தீவனம் வெட்டும் கருவி வாங்க ரூ.25 ஆயிரம் மானியமும், மக்காச் சோளம் பிரிக்கும் இயந்திரத்திற்கு ரூ.80 ஆயிரமும், பல தானியம் கதிரடிக்கும் இயந்திரம் வாங்க ரூ.1.50 லட்சமும், விசைக் களை எடுப்பான் இயந்திரத்திற்கு ரூ.50 ஆயிரமும், சுழலும் கலப்பைக்கு ரூ.20 ஆயிரமும், பவர் டில்லருக்கு ரூ.45 ஆயிரமும், மினி டிராக்டர் வாங்க ரூ.1.25 லட்சமும், நெல் நடவு மற்றும் நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.4 லட்சம் மானியமும் தமிழக அரசு வழங்குகிறது.

தற்போது 2012-13-ம் நிதியாண்டில் அரசு மானியம் ரூ.1.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதை வாங்கிச் செல்ல அதிகமான விவசாயிகள் முன்வரவில்லை. தற்போது மார்ச் 31-ம் தேதிக்குள் இயந்திரம் வாங்கும் விவசாயிகளுக்கு மட்டும் அரசு மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி தமிழக அரசு விவசாயிகளுக்கு தரும் சலுகைகளை பெற்று வாழ்வில் வளம் பெற வேண்டும்.

மானிய விலையில் விவசாயக் கருவிகளை வாங்க விரும்பும் விவசாயிகள் உடனடியாக கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு எதிரேயுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்றார் உதவி வேளாண் பொறியாளர் ஈ.சங்கரசுப்பிரமணியன். உதவி செயற்பொறியாளர் ப.செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.