தெய்வீகத் தன்மையை உணர்த்தும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி!
சைவ சமயம் சார்ந்தவர்களுக்கு கோயில் என்றாலே சிதம்பரம் என்றே பொருள். 2 ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேல் பழமையான சைவ வழிபாட்டுத் தலமான இந்த ஊரின் பெருமைக்கு அளவே இல்லை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட எண்ணற்ற நாயன்மார்களும், வள்ளாரும் மற்றும் பலராலும் பாடப் பெற்ற பெருமை
"நாட்டியாஞ்சலி" என்ற சொல் இன்றைக்கு உலகெங்கிலும் உள்ள பாரத நாட்டு பாரம்பரிய ஆடல் கலைஞர்களுக்கு பரவச உணர்வை ஏற்படுத்தும் சொல்லாக மாறிவிட்டது. திருச்சிற்றம்பலம்-தில்லை-சிதம்பரம் எனப் பல்வேறு பெயர்களால் குறிக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆலயத்தில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நாளில் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி எனப்படும் ஆடல் பெருவிழாவே இதற்கு காரணம்.
சைவ சமயம் சார்ந்தவர்களுக்கு கோயில் என்றாலே சிதம்பரம் என்றே பொருள். 2 ஆயிரம் ஆண்டு காலத்திற்கு மேல் பழமையான சைவ வழிபாட்டுத் தலமான இந்த ஊரின் பெருமைக்கு அளவே இல்லை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட எண்ணற்ற நாயன்மார்களும், வள்ளாரும் மற்றும் பலராலும் பாடப் பெற்ற பெருமை உடையவன் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளும் தமிழுலகிற்கு கிடைக்க பெற்றமைக்கு சிதம்பரமே காரணம். அதனாலேயே எந்த ஊரில் திருமுறை ஓதினாலும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லையே தொடங்குவர்.
சிதம்பரம் ஸ்தலத்தின் பெருமையினால் காலங்கள் தோறும் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் பலரும் 10-ம் நூர்ற்றாண்டு தொடங்கி 16-ம் நூற்றாண்டு வரை செய்த பல்வேறு திருப்பணிகளால் வானளாவிய கோபுரங்களுடன் கூடிய பெரிய கற்கோயிலாக உருவெடுத்தது. பின்னர் நாட்டுக் கோட்டை நகரத்தார்களும், யாழ்ப்பான தமிழர்களும், சிதம்பரம் பகுதியைச் சார்ந்த வேளாளர்களும், தொடர்ந்து கொடுத்து வந்த கொடைகளால் என்று மாறாத வழிபாட்டு ஸ்தலமாக உயிர்போடு இயங்கும் திருக்கோயிலாக நடராஜர் கோயில் உள்ளது. கோயிலிலின் பெருமையே, அறிவுக் கோயிலாம் அண்ணாமலைப் பல்கலைக்கழகும் இம்மண்ணில் அமையக் காரணமாயிற்று. ஆன்மீகக் கோயிலாக மட்டுமின்றி ஆடல் கலையின் இலக்கணத்தை (108 கரணங்கள்) சிற்பமாக வடித்தும் அழியாத கலைக் கோயிலாக அமைந்துள்ளது. இவ்வாறு தமிழும், இசையும், கலையும் உயிராய் கலந்த இம்மண் தமிழர்களின் பண்பாட்டு சிகரமாய் விளங்கும் ஆடல் கலையின் தெய்வீகத் தன்மையை மீண்டும் உணர்த்த எழுந்த ஒரு முயற்சியே நாட்டியாஞ்சலி பெருவிழா. இசையும், ஆடலும் இறைவனுக்கே அர்ப்பணிக்கத்தக்கது என்ற உணர்வோடு கோயில் வழிபாட்டிலும், விழாக்களிலும் நிகழ்த்தப் பெற்ற பண்பாடு தமிழர்களுடையது. அப்பொழுது அதனை நுகரும் மக்களும் இறை உணர்வாக ஒன்றியிருக்கும் அனுபவத்தினைப் பெறுவர். மேலை நாடுகளின் இசையும், ஆடலும் புலன் இன்பத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் தமிழர் பண்பாட்டில் இறை உணர்வை மையமாக வைத்து அவை உருவாக்கப்பட்டன. நாள்தோறும் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டில் நிகழ்த்தப் பெரும் 16 வகை உபசாரங்களில் கீதம், வாத்தியம், நிருத்தம் என இசையும், பாடலும், ஆடலும் இடம் பெறும்.
இவ்வாறு தெய்வீக உணர்வு நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக இசையும், பாடலும், ஆடலும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு ஆலயங்களிலே படைக்கப் பெற்றது. அதன் வழி மக்களை அடைந்த ஆடல்கலை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு அரசியல், சமூக மாற்றங்களினால், சட்ட நெருக்கடிகளால் ஆலயங்களை விட்டு வெளியேறி பெருநகரங்களிலே அரங்குகளிலே (From Temples to Theaters) ஆடப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு பக்கம் ஆடல்கலை பயிலுவதற்கு முற்காலத்தில் இருந்த கட்டுப்பாடு எல்லைகளை கடந்து பலரும் அதனை பயில முன் வந்தனர். ஆனால் மறுபக்கத்தில் தெய்வீக அர்ப்பணிப்பு உணர்வுகளை மெல்லக் குறைந்து, இந்த கலை மற்றவர்களை மகிழ்விக்கவும், புகழ்பெறவும் கையாளப்படும் நிலை ஏற்பட்டது.இந்த மாற்றத்தை நெறிபடுத்த வேண்டும் என்ற உணர்வோடு அறிஞர்களான டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கினர். ஆடல் கலைஞர்கள் இனம், மொழி, சமயம் கடந்து தங்கள் நாட்டியத்தை இறை உணர்வோடு அஞ்சலியாக செலுத்தும் நாட்டியாஞ்சலியாக மலர்ந்தது. இன்றைக்கு பாரத நாட்டின் அனைத்து வகை ஆடல் கலைஞர்களும், பரதநாட்டியம், கூச்சுப்புடி, மோகினி ஆட்டம், கதக், ஓடிஸி, சத்ரியா, மணிப்புரி. கத்தகளி, யட்சகானம், ச்சாவ் உள்ளிட்ட நாட்டியங்களை ஆடல்வல்லான் திருவடியில் அஞ்சலி செலுத்தும் மாபெறும் பண்பாட்டு கலை விழாவாக உருவெடுத்துள்ளது. உயரிய நோக்கங்களின் தூய்மை. நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் நெறி தவறாத உறுதி. ஆடல் கலைஞர்களின் முழு ஒத்துழைப்பு, அன்பு உள்ளங்களின் பொருளுதவி, மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு, ரசிகப் பெருமக்களின் திருவளால் கலைக்கோயிலாய் நாட்டியாஞ்சலி திகழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 32-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மார்ச் 10-ம் தேதி மாலை மகா சிவராத்திரியன்று தொடங்குகிறது. நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து மார்ச்.14-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், வி.எஸ்.ராமலிங்கம், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.