தேர்வுக்குச் சென்ற பிளஸ்-2 மாணவி டிராக்டர் மோதி சாவு
சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36).
சேலத்தில் தேர்வு எழுதச் சென்ற பிளஸ்-2 மாணவி டிராக்டர் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (36). இவர்களது குழந்தைகள் சரண்யா (17), மதன் (14). சரண்யா சேலம் மரவனேரி பாலபாரதி பள்ளியில் பிளஸ் 2- படித்து வந்தார். மதன் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் சரண்யா, இன்று காலை வேதியியல் தேர்வு எழுதுவதற்காக மரவனேரி பகுதியில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளிக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். கோர்ட் ரோடு, பிள்ளையார் நகர் வளைவில் இருந்து மிதிவண்டியை தள்ளிக் கொண்டு சாலையோரமாகச் சென்று கொண்டிருந்தார்.அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் கந்தசாமி என்பவர் மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை சாலையோரத்தில் கொட்டி வைத்திருந்தார். இதனால் சாலை மிகவும் குறுகியிருந்தது. அப்போது அஸ்தம்பட்டி தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் ஏற்றிக் கொண்டு மரவனேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த மாநகராட்சியின் ஒப்பந்த டிராக்டர், சரண்யா மீது மோதியது.
Advertisement
இதில் நிலைதடுமாறிய அவர் டிராக்டர் சக்கரத்துக்குள் விழுந்தார். சக்கரம் தலையில் ஏறியதால் படுகாயம் அடைந்த சரண்யா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் மாநகர காவல் துணை ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். டிராக்டர் டிரைவர் தும்பல் அருகேயுள்ள எடப்பட்டியைச் சேர்ந்த குணசேகரன் (47) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.