புதுவை-திருப்பதி ரயிலை மறித்து புதுவை பல்கலை மாணவர்கள் போராட்டம்
புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி - திருப்பதி ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதுச்சேரி - திருப்பதி ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடந்த இந்த போராட்டத்தால், மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 2 மணிக்கு தாமதமாகப் புறப்பட்டது.
ரயில் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், அப்பகுதிக்கு காவல்துறையினர் வந்ததும், மறியலை கைவிட்டு அந்த ரயிலில் ஏறிக் கொண்டனர். ரயில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் என்ற இடத்தில் வயக்காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, மாணவர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர். பிறகு ரயிலில் இருந்து இறங்கி, ரயிலின் முன்பு வந்து அமர்ந்து மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி சாலை வசதிகள் இல்லாத பகுதி என்பதால், தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், காவல்துறை வாகனம் மூலமாக அப்பகுதியை நெருங்க முடியாமல், வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.