முகப்பு
தற்போதைய செய்திகள்

வறட்சியால் மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

வறட்சி காரணமாக மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:36 AM
பகிர்:

வறட்சி காரணமாக மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இங்கு ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகள், எருமைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இவற்றை வாங்க ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே, தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்களிடம் இருக்கும் மாடுகள், எருமைகளின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

தங்களது மாடுகள், எருமைகளை விவசாயிகள் விற்பனை செய்ய தொடங்கியுள்ளதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது. வரத்து அதிகரித்தபோதும் மாடுகள், எருமைகள் விலை குறையவில்லை.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழக வியாபாரிகள் மாடுகள், எருமைகளை போட்டி போட்டு வாங்குவதால் விலை குறையவில்லை என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. மாடுகள் ரூ.18,000 முதல் ரூ.35,000 வரையும், எருமைகள் ரூ.16,000 முதல் ரூ.36,000 வரையும் விலை போனதாகவும் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரத்தை ஒப்பிடும் போது மாடுகள், எருமைகள் தலா ரூ.500 அதிகம் விலை போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.