நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்: பயணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தவறுதலாக ஊர் பெயர் குறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தவறுதலாக ஊர் பெயர் குறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் பெயர் பலகையால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் பெயர் பலகையில் உள்ள பிழையை திருத்தி உடனடியாக புதிய பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கு உள்ளது. இந்த விலக்கின் வழியே பாடக்குளம், நிறைமதி, விழுப்பனூர், மல்லி வழியாக சிவகாசி வரை செல்ல இயலும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பூவாணி விலக்கில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டது. இதில் பூவாணி என்பது தவறுதலாக பூவலணி என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பூவாணி சாலையை புதியதாக பயன்படுத்த இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருவோர், பூவலணி என்ற பெயர் பலகையைப் பார்த்துவிட்டு இது பூவாணி இல்லை என்று கருதி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கிருஷ்ணன்கோவில் வழியே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பூவாணி கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஏ.பில்டர்ஸ், நிர்வாக இயக்குநர் அ.மகேந்திரன் கூறும் போது, எத்தனையோ நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் இந்த பிரதானச் சாலை வழியே சென்று வருகிறார்கள். இவ்வாறு தவறுதலாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதை பார்த்தும், கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். பெயர் பலகைகள் வைக்கும் போது அதனை அலுவலர்கள் சரி பார்த்து தான் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் அனுமதித்திருப்பார்கள். சிறிய பிழையாக இருந்தாலும் இதனால் இப் பாதையை புதியதாக பயன்படுத்த வருவோர், பூவாணி என்ற ஊரே இல்லை என்றும் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலர்கள் உடனடியாக இந்தப் பெயர் பலகையை எடுத்துவிட்டு, சரியாக ஊர் பெயர் எழுதிய பெயர் பலகை வைக்க வேண்டும் என்றார் அவர்.
Advertisement