ஸ்ரீவிலி.யில் இளம் பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகளே ஆன நிலையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகளே ஆன நிலையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டாட்சியர் தீவிர விசாணை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சந்தவிழ்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்-சங்கரம்மாள் (40). இவர்களின் மகள் தனலட்சுமி (19). இவரை தங்களது நெருங்கிய உறவினரான ஸ்ரீவில்லிபுத்தூர்-மடவார்வளாகம், காளையார் குறிச்சி தெருவைச் சேர்ந்த ராஜாராமுலு என்பவருக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். திருமணத்தின் போது நகை, பணம் ஏதும் வரதட்சிணையாக கொடுக்கவில்லையாம். இவர்களுக்கு ஒன்னரை வயதில் ஆண் குழந்தை உண்டு.
வியாழக்கிழமை தனலட்சுமி வீட்டில் நாட்டுக் கோழி எடுத்து சமைத்து, அதை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டாராம். சாப்பிட்டதில் இருந்து வயிறு சரியில்லாமல் இருந்து வந்ததாம்.
Advertisement
இதில் மனம் உடைந்த தனலட்சுமி, சனிக்கிழமை இரவு கணவர் ராஜாராமுலு மில் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டின் மாடியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்து சங்கரம்மாள், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சிவகாசி கோட்டாட்சியர் தனலட்சுமியின் தற்கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.