கோவில் முன் மண்டப மேற்கூரை இடிந்து மூதாட்டி சாவு
திருநெல்வேலி நகரம் ஆசாத் சாலையை சேர்ந்தவர் ஆ. லெட்சுமி (76). கவனிப்பார் யாரும் இல்லாததால் இவர், திருநெல்வேலி நகரம் குற்றாலம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முப்பிடாதி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் இரவில் தங்குவது வழக்கமாம்
திருநெல்வேலியில் கோவில் முன் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மூதாட்டி இறந்தார்.
திருநெல்வேலி நகரம் ஆசாத் சாலையை சேர்ந்தவர் ஆ. லெட்சுமி (76). கவனிப்பார் யாரும் இல்லாததால் இவர், திருநெல்வேலி நகரம் குற்றாலம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முப்பிடாதி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் இரவில் தங்குவது வழக்கமாம்.இந்நிலையில் சனிக்கிழமை இரவும் லெட்சுமி வழக்கம் போல் கோவில் மண்டபத்தில் படுத்திருந்தாராம். அப்போது இரவு 11 மணியளவில் திடீரென கோவில் முன் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கு அடியில் லெட்சுமி சிக்கிக் கொண்டார்.
அவரது அலறல் சப்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர், அங்கு வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லெட்சுமி சிறிது நேரத்தில் இறந்தார்.இந்த கோவில் சுவர் மற்றும் மேற்கூரை மிகவும் பழமையானதாகும்.சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக திருநெல்வேலி நகரம் போலீஸார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement