முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலையில் நிதிநெருக்கடி சீரமைக்கப்பட்டு வருகிறது: நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா

பல்வேறு வங்கிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல கணக்குகள் உள்ளன. அவை எத்தனை கணக்குகள் என ஆய்வு செய்யப்பட்டது. இதில் 401 கணக்குகள் இருந்தன. இதில் தேவையில்லாத 114 கணக்குகள் மூடப்பட்டது. மீதமுள்ள 286 கணக்குகளில், 157 கணக்குகள் மாடர்ன் பேங்கிங் டெக்னிக் கணக்காக

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:48 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி இன்னும் தொடருகிறது. வங்கி கணக்குகளை சீரமைப்பது, பிஇ., எம்பிபிஎஸ் அனுமதி சேர்க்கை மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கக அனுமதி சேர்க்கை மூலம் நிதிநெருக்கடியை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டு பொறுபபேற்று பணியாற்றி வரும் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

பல்வேறு வங்கிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பல கணக்குகள் உள்ளன. அவை எத்தனை கணக்குகள் என ஆய்வு செய்யப்பட்டது. இதில் 401 கணக்குகள் இருந்தன. இதில் தேவையில்லாத 114 கணக்குகள் மூடப்பட்டது. மீதமுள்ள 286 கணக்குகளில், 157 கணக்குகள் மாடர்ன் பேங்கிங் டெக்னிக் கணக்காக மாற்றப்பட்டு அதிலிருந்த தொகை ரூ.56 கோடி வைப்புத் தொகையாக மாற்றப்பட்டு கூடுதலாக வட்டி வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பென்ஷன், பிராவிடன்ட் பண்ட் தொகை ரூ.42 கோடியை வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு 9 முதல் 10 சதவீதம் வரை வட்டி வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.30 லட்சம் கூடுதலாக வட்டி கிடைக்குமாறு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதி வரை மாணவர்களிடம் பெற்றப்பட்ட காசோலைகள் வங்கியில் ஈடு செய்யப்படாமல் ரூ.2.63 கோடி இருந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.2.18 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிலுவையிலிருந்த மானியத்தொகை அரசிடமிருந்து ரூ.24.47 கோடி பெறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, மருத்துவம், மாணவர் விடுதி, பாதுகாப்பு பணி, மின்சாரம், நீர்விநியோகம், தோட்டம் உள்ளிட்ட துறைகளில் தனி கவனம் செலுத்த முதன் முறையாக ஆறு குழுக்கள் பதிவாளர், புல முதல்வர் மற்றும் மூத்த பேராசிரியர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு வாரந்தோறும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஷிவ்தாஸ் மீனா தெரிவித்தார்.

நூறு விழுக்காடு தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை: 2013-14 கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., பிபிடி., பிஎஸ்சி நர்சிங்., பிஇ., பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி தோட்டக்கலை ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மே 10, 12 தேதிகளில் நடைபெற இருந்த நுழைவுத்தேர்வுகளின் தேதிகள் மாணவர்கள் நலன் கருதி மீண்டும் வாய்ப்பளிக்கும் விதமாக ஜூன் 7,8,9 தேதிகளில் நடத்தப்படவுள்ளது. கடந்த ஆண்டு அண்ணாமலைநகரில் மட்டும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சென்னை, சேலம், திருநெல்வேலி, அண்ணாமலைநகர் ஆகிய 7 மையங்களில் நடத்தப்படுகிறது. மேற்காணும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மே.28-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே.28-க்குள் அளிக்க வேண்டும். நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நூறு விழுக்காடு தகுதி அடிப்படையில் அனுமதி சேர்க்கை செய்யப்படும். பல்கலைக்கழகம் அறிவித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். தமிழகஅரசின் இடஒதுக்கீடு முறையில் அனுமதி சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் பிஇ படிப்பிற்கு 5 ஆயிரம் பேர் சேருவதற்கு சிண்டிகேட் அனுமதி அளித்திருந்தது. இந்த ஆண்டு பல்கலைக்கழக கட்டமைப்பு வசதி படி 2500 முதல் 2800 வரை அனுமதி சேர்க்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் 100 இடங்களுக்கும், பி.பார்மா 100 இடங்களுக்கும் அனுமதி சேர்க்கை செய்யப்படும். இதுவரை பொறியியல், விவசாயம் சார்ந்த படிப்பிற்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் 3898-ம், மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு விண்ணப்பங்கள் 1204-ம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவையல்லாமல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு இறக்கம் செய்து வரைவோலை இணைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.

பேட்டியின் போது பதிவாளர் என்.பஞ்சநதம், உதவி நிர்வாக அலுவலர்கள் பொறுப்பில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிருஸ்துராஜ், மருத்துவப்புல முதல்வர் என்.சிதம்பரம், பொறியியல் புல முதல்வர் வேலுசாமி, வேளாண்புல முதல்வர் ஆர்.எம்.கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →