இலவச பேருந்து பயண அட்டை: புகைப்படங்களை விரைவாக வழங்கிப் பெற ஆட்சியர் அறிவுரை
இலவச பயண அட்டைகள் பெறும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் புகைப்படங்களை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலவச பயண அட்டைகள் பெறும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகங்களில் புகைப்படங்களை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில், அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் பள்ளி திறந்தவுடன் முன் கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதனால், பள்ளிகளுக்கு அருகே விவகார எல்லையில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து பணிமனை கிளைகளுக்குச் சென்று படிவம் 1,2 ஐ பெற வேண்டும். அதில், படிவம் 1ல் மாணவர்களின் புகைப்படத்தை ஒட்டி விவரங்களை குறிப்பிட வேண்டும். அதையடுத்து படிவம் 2ல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை குறுந்தகடில் பதிவு செய்து உடனே இலவச பயண அட்டை பெற்ற கிளைகளில் திரும்ப கொடுக்க வேண்டும்.
இக்குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் கிடைத்தவுடன் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இலவச பயண அட்டை விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். அதனால், பெற்றோர்கள் மாணவ, மாணவிகளின் விவரங்களை அரசு போக்குவரத்துக் கழகத்தில் விரைவாக கொடுக்க கொடுக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Advertisement