வெவ்வேறு இடங்களில் தீ விபத்து 2 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
கடலூரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்து சாம்பலானது.
கடலூரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்து சாம்பலானது.
கடலூர் குண்டுஉப்பலவாடி, அன்னைதெரசா நகரை சேர்ந்தவர் கண்ணுசாமி(37). டிராக்டர் டிரைவர். இவருடைய மனைவி நிர்மலா. இவர் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, திடீரென வீட்டின் மேற்கூரை தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி அனைத்து இடங்களிலும் பற்றி எரிந்தது.
தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
Advertisement
கண்ணுசாமி வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமானது. கடலூர் புதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு தீ விபத்து
கடலூர் அருகே ஞானமேடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (35). இவரது வீடு வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவி வீட்டின் அனைத்து பகுதிகளிலும் பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள் உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக தெரிகிறது. ரெட்டிச்சாவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.