ஆதித் தமிழர் பேரவை ரயில் மறியல்: அலைக்கழிக்கப்பட்ட போலீஸார்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையினர் ரயில் மறியலில் ஈடுபடுவதாக வந்தத் தகவலைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகரப் போலீஸார் பாளையங்கோட்டைக்கும், சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் அலைக்கழிக்கப்பட்டனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையினர் ரயில் மறியலில் ஈடுபடுவதாக வந்தத் தகவலைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகரப் போலீஸார் பாளையங்கோட்டைக்கும், சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் அலைக்கழிக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ள ரயில்நிலையத்தில் மறியல் நடப்பதாக முதலில் தகவல் கிடைத்ததால் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ரயில்நிலையத்தில் குவிக்கப்பட்டனர். ரயில் தண்டவாளப் பகுதி, ரயில்நிலைய பயணிகள் நடைபாதை பகுதி ஆகியவற்றில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர். காலை 8.30 மணிக்கு தொடங்கி 10 மணி வரை காத்திருந்தும் மறியல் போராட்டத்துக்கு யாரும் வரவில்லை.
இந்த நிலையில், திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்தில்தான் மறியலில் ஈடுபடவதாக தகவல் கிடைக்கவும் சந்திப்புப் பகுதி போலீஸார் உஷார்படுத்தப்பட்டன. காலை 10 மணிக்கு ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலர் கலைக்கண்ணன், மாநகரச் செயலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் ரயில்நிலையத்தை நோக்கி வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மறியலுக்கு முயன்றதாக 19 பேரைக் கைது செய்து திருமண மஹாலில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.