முகப்பு
தற்போதைய செய்திகள்

சேவை வரி செலுத்தாவிட்டால் சட்டம் பாயும்: ப. சிதம்பரம் எச்சரிக்கை

மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தானாக முன்வந்து சேவை வரி கட்டுவதை ஊக்கப்படுத்தும் திட்டம் குறித்த

Updated On : 9 நவம்பர், 2013 at 7:47 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:11 AM

சேவை வரி கட்டாதவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய கலால் மற்றும் சேவை வரித்துறை சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தானாக முன்வந்து சேவை வரி கட்டுவதை ஊக்கப்படுத்தும் திட்டம் குறித்த கருத்தரங்கில் அவர் பேசியது: கல்வி தவிர மற்ற சேவைகளை சந்தைப்படுத்தும்போது அதற்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. சேவை வரி செலுத்த வேண்டியவர்கள் அது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளனர்.

உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நமது நாட்டில்தான் வருமான வரி, சொத்து வரி, சேவை வரி  போன்ற வரிகளைச் செலுத்துவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. வரி செலுத்துவோரிடம் இந்திய அரசு மட்டுமே மென்மையாக நடந்து கொள்கிறது.

Advertisement

17 ஆண்டுகளுக்கு முன்பு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது சுமார் 17 லட்சம் பேர் தானாக முன்வந்து வரி கட்ட முன்பதிவு செய்தனர். ஆனால், அவர்களில் 7 லட்சம் பேர் மட்டும் வரி செலுத்தினர். 10 லட்சம் பேர் வரி கட்டவில்லை. வரி செலுத்தியவர்களில் பலர் தொடர்ந்து கட்டாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். வரி கட்டாதவர்கள் தங்களை அறிவாளியாக நினைத்துக் கொள்கின்றனர்.

நமது பக்கத்து வீட்டுக்காரர் கட்டுவதில்லை. நாம் மட்டும் ஏன் கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த மனப்பான்மை மாற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு சேவை வரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவது அவசியமானது.

சேவை வரி கட்ட வேண்டியவர்கள் யார் யார் என்பதை மத்திய அரசு கண்காணித்து வைத்துள்ளது. வரி கட்ட வேண்டியவர்களின் நிரந்தர வங்கி கணக்கு எண் (பான் கார்டு), வங்கிக் கணக்குகள் ஆகியவை நிதி அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகிறது.

நிதித் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வாகன வசதி குறைவால் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் சேவை வரி முழுவதையும் வசூலிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தானாக முன்வந்து சேவை வரி கட்டுவதற்கான திட்டத்தை சேவை வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மனசாட்சிப்படி சேவை வரியை செலுத்த வேண்டும்.

சேவை வரி கட்டாத சிலர் கைது செய்யப்பட்ட பிறகு வரி கட்டுதல் அதிகரித்துள்ளது. யாருக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல. அதே நேரத்தில் சேவை வரி கட்டாதவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றார் ப. சிதம்பரம்.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் உறுப்பினர்கள் பிரவீன் மகிழன், சாந்தி சுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.