கோபாலசமுத்திரம் சம்பவம்: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தனி வகுப்புகள்
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே தெற்கு ஊர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக திங்கள்கிழமை தனி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே தெற்கு ஊர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக திங்கள்கிழமை தனி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வகுப்புகள் தற்காலிகமாக இயங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து கோபாலசமுத்திரம் வடக்கு ஊர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோபாலசமுத்திரத்தில் அக். 31 ம் தேதி சமுதாயக் கொடிக் கம்பம் அவமரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து கோபாலசமுத்திரம் தெற்கு ஊரை சேர்ந்த லட்சுமணன் மகன் தர்மராஜ் (27) கொலை செய்யப்பட்டார். கோபாலசமுத்திரம் மேலஓமநல்லூரை சேர்ந்த முருகன் (40) நிலம் தொடர்பான விரோதத்தில் கொலை செய்யப்பட்டார். இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு அமைதியற்ற சூழல் உள்ளது.இதையடுத்து கோபாலசமுத்திரம், பிரான்சேரி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு கடந்த சில தினங்களாக செல்லவில்லை. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பயில தனி்ப்பள்ளிக் கூடம் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதற்கிடையே தெற்கு ஊர், பிரான்சேரி, கொத்தன்குளம் பகுதியை சேர்ந்த 140 மாணவர்கள் பயிலும் வகையில் கிராம மக்கள் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் திங்கள்கிழமை தனிப்பள்ளி வகுப்புகளை தொடங்கினர். அவர்களே தனியாக ஆசிரியர்கள் நியமித்து பாடம் நடத்த முடிவு செய்தனர்.இதை தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ரா. இளங்கோ, முதன்மை கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வட்டாட்சியர் ரா. சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலர் ஆ. பத்மா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெற்கு ஊரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தனியாக வகுப்புகள் தற்காலிகமாக இயங்க முடிவு செய்யப்பட்டது.
இதன்படி கோபாலசமுத்திரம் தெற்கு ஊர், பிரான்சேரி, கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்த 137 மாணவர்களுக்கு தனியாக வகுப்புகள் நடத்தப்படும். ஏற்கனவே இயங்கும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். இந்த வகுப்புகள் தற்காலிகமாக இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
வடக்கு ஊர் கிராம மக்கள் முற்றுகை:
கோபாலசமுத்திரம் வடக்கு ஊர் கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து காவல்துறையினரின் நெருக்கடி காரணமாக தங்கள் பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாய வேலைக்கு செல்ல முடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில செல்ல முடியாத நிலை உள்ளது. விசாரணை என்ற பெயரில் தங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு நெருக்கடி அதிகமாக உள்ளது என அவர்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.