வனப்பகுதியில் மணல் அள்ளியதாக புகார்: முண்டன்துறை வனச்சரகர் தற்காலிக பணியிடை நீக்கம்
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் மணல் அள்ளியதாக எழுந்த புகாரை தொடர்ந்து முண்டன்துறை வனச்சரகர் வியாழக்கிழமை இரவு தற்காலிக பணியிடை நீக்கம்
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வனப்பகுதியில் மணல் அள்ளியதாக எழுந்த புகாரை தொடர்ந்து முண்டன்துறை வனச்சரகர் வியாழக்கிழமை இரவு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குறுங்குடியில் இருந்து கடையம் வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகம் களக்காடு, முண்டன்துறை ஆகிய இரு சரகங்களாக செயல்பட்டு வருகிறது.அண்மையில் மணிமுத்தாறு அருவியில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிக்காக அணையில் இருந்து மணல் எடுத்ததாகவும், அருவியில் பாறையை வெடி வைத்து உடைத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அம்பாசமுத்திரம் வனச்சரகர் பாலேந்திரன், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
புலிகள் காப்பகத்தில் முண்டன்துறை வனப்பகுதியில் சோதனைச் சாவடி அருகில், கடுவா ஓடை, தைலாத்ஓடை ஆகிய பகுதியில் மணல் அள்ளியதாக புகார் கூறப்பட்டது. மேலும் புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கு சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தியது தொடர்பாகவும் முதன்மை வனப்பாதுகாவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முண்டன்துறை வனச்சரகர் ஜெபாஸ் வியாழக்கிழமை இரவு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.