நெல்லை அருகே கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை: பொதுமக்கள் மறியல்
திருநெல்வேலி அருகே கூலித்தொழிலாளி மர்மநபர்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்
திருநெல்வேலி அருகே கூலித்தொழிலாளி மர்மநபர்கள் சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி முப்பிடாதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளையன் மகன் பரமன் என்ற பரமசிவன் (43). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், மகன் கணேசனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், கொண்டாநகரம் முடப்பாலம் அருகே வயல் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்களை பாதுகாக்க சனிக்கிழமை மாலையில் பரமசிவன் சென்றாராம். பின்னர் டிராக்டரின் அருகே பாறையில், தார்பாயை மூடிக்கொண்டு படுத்திருந்தாராம். ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்று பார்த்தபோது, வெட்டுக்காயங்களுடன் தலைதுண்டித்த நிலையில் பரமசிவன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்ததும் சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரேஸ்வரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி சென்று விசாரணை நடத்தினார்.
சாலைமறியல்
பரமசிவன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், அவரது உறவினர்கள் சுத்தமல்லியில் திரண்டனர். கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பரமசிவனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் திருநெல்வேலி-சேரன்மகாதேவி பிரதான சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ் வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்துகள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. சேரன்மகாதேவியில் இருந்து வந்த வாகனங்கள் திருப்பணிகரிசல்குளம் பகுதி வழியாக திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சுத்தமல்லியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.