புவனகிரியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சாலைமறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூரில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த சில மாதங்கள் முன்பு புவனகிரியில் சேத்தியாத்தோப்பு செல்லும் பிரதான சாலையில் மாற்றப்பட்டது.
சிதம்பரம் அருகே புவனகிரியில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே சி.தண்டேஸ்வரநல்லூரில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த சில மாதங்கள் முன்பு புவனகிரியில் சேத்தியாத்தோப்பு செல்லும் பிரதான சாலையில் மாற்றப்பட்டது. அப்பகுதியில் ஐ.டி.ஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை அகற்ற கோரிக்கை விடுத்தும் கடை அகற்றப்படவில்லை. எனவே மதுபானக்கடையை உடன் அகற்றக் கோரி புவனகிரி பஸ் நிலையம் அருகே புதன்கிழமை காலை கடலூர் செல்லும் சாலையில் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சவுந்திரபாண்டியன் தலைமையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தில் மன்ற துணைத் தலைவர் என்.ராம்குமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணன், ஜெகன், பி.ஜி.கே.முத்து, முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கோவி.பழனிச்சாமி, விநாயகம், சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகரச் செயலாளர் வெற்றிவேல், பாமக நகரச் செயலாளர் முத்து, மதிமுக நகரச் செயலாளர் ஏ.ஜி.எஸ் ரவி மற்றும் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். டாஸ்மாக மதுபானக்கடையை இரண்டு தினங்களில் அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் சிதம்பரம்- கடலூர் சாலையில் காலை 10.45 முதல் 11.45 வரை சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.