மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நன்றி
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
கடித விபரம்: சிதம்பரம் வட்டம் பெராம்பட்டு திட்டுகாட்டுரில் கடந்த நவ.3-ம் தேதி ஹரிதாஸ், சுப்பிரமணி ஆகிய இருளர் சமூகத்தை சேர்ந்த இருவர் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து இறந்தனர். இந்த இருவரது குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கடந்த நவ.12ம் தேதி வேண்டுகோள் விடுத்து தங்களுக்கு கடிதம் எழுதினேன். எனது வேண்டுகோளை ஏற்று மேற்கண்ட இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,
மேலும் மின்சாரம் தாக்கி இறந்தோர் குடும்பத்திற்கு வழக்கு இல்லாமல் சமரசம் திட்டம் மூலம் மின்துறை சார்பில் ரூ.2 லட்சம் வழங்கிடும் திட்டம் அமலில் உள்ளது. ஆனால் திட்டுத்காட்டுரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முறையான காரணம் இல்லையென்று நிதி வழங்க மின்துறை மறுத்து வருகிறது.
மேலும் அந்த விபத்துக்கு அங்குள்ள பயனாளி ஒருவர் தான் காரணம் என்றும் தேவையென்றால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு பெற்று கொள்ளலாம் என மின்துறை தெரிவித்துள்ளது. இருளர் சமூகத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அக்குடும்பத்தினர் தினக்கூலிகள். இவர்களால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுத்து நடத்துவது மிகவும் சிரமம். எனவே அவர்களுக்கு சமரச திட்டத்தின் மூலம் மேலும் தலா ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்திரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கடிதத்தில் கூறியுள்ளார்.