கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் சிறைபிடிப்பு
சிதம்பரம் அருகே கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் கணவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். போலீஸார் சென்று சுமார் ஒன்றரை மணி
சிதம்பரம் அருகே கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் கணவர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர். போலீஸார் சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் அவர்களை விடுவித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேல்புவனகிரி ஒன்றியத்தைச் சேர்ந்த கீழமூங்கிலடி ஊராட்சியில் புதன்கிழமை கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் சுதா அருள்தாஸ், துணைத்தலைவர் சுடர்விழியின் கணவர் அன்பரசு, உறுப்பினர் சேகர், ஊராட்சி மன்ற செயலாளர் சுதாகர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது காலனி மக்கள் தங்கள் பகுதியில் 3 மாதமாக தெருவிளக்கு, குடிநீர் வசதி கிடையாது. 100 நாள் வேலை திட்டத்தில் குறைவாக ஏன் சம்பளம் வழங்கப்படுகிறது என தலைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு தலைவர் சுதா, துணைத் தலைவர் 38 காசோலைகளில் கையெழுத்து போடவில்லை. இதனால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. செய்த வேலைக்கு பணம் தர முடியவில்லை. இதற்கு அவர்தான் காரணம் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கிராமசபை கூட்டம் நடந்த கட்டடத்தை சுமார் 12.15 மணிக்கு பூட்டு போட்டு பூட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் தாலுக்கா போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து 1.30 மணிக்கு பூட்டை திறந்து பொதுமக்கள் விடுவித்தனர்.
ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தனக்கு கமிஷன் தொகை தந்தால்தான் காசோலையில் கையெழுத்திடுவோம் என துணைத்தலைவரின் கணவர் அன்பரசு வலியுறுத்துவதால் எந்த பணியும் நடைபெறவில்லை எனவும், காசோலையில் கையெழுத்திடாததால் குடிநீர் மற்றும் தெருவிளக்கு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை என தலைவர் சுதாஅருள்தாஸ் டிஎஸ்பியிடம் முறையிட்டார். இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் துணைத்தலைவர் சுடர்விழி மற்றும் கணவர் அன்பரசு ஆகியோரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தார்.