நெல்லை அருகே வழக்குரைஞர் வீட்டில் 30 பவுன் நகை, பணம் கொள்ளை
பாளையங்கோட்டை அருகே பூட்டியிருந்த வழக்குரைஞர் வீட்டை உடைத்து 30 பவுன் தங்கநகைகள், ரொக்கம் ரூ. 30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளை அடித்து சென்றனர்.
பாளையங்கோட்டை அருகே பூட்டியிருந்த வழக்குரைஞர் வீட்டை உடைத்து 30 பவுன் தங்கநகைகள், ரொக்கம் ரூ. 30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளை அடித்து சென்றனர்.
பாளையங்கோட்டை அருகே அமோசர்ஸ் காலனியில் பிளாட் எண் 20 ல் வசித்து வருபவர் சுப்பிரமணியன் மகன் முருகவேள் (68). வழக்குரைஞர். இவரது மனைவி அயனாபிள்ளை அம்மாள், மகன் வியாஸ்மணிவேல். மகன் சென்னையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அயனாபிள்ளை அம்மாள் சென்னையில் வசிக்கும் மகன் வீட்டுக்கு சென்றாராம்.
முருகவேள் வெள்ளிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு பாளையங்கோட்டையில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றிருந்தாராம். இரவு 9.15 மணிக்கு முருகவேல் வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து அங்கிருந்த சுமார் 30 பவுன் எடையுள்ள தங்கநகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
தகவலறி்ந்த கூடுதல் உதவி ஆணையர் லயோலாஇக்னேஷியஸ் மற்றும் போலீஸார் சம்பவ நடைபெற்ற வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சாகர் வரவழைக்கப்பட்டது. விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பாளையங்கோட்டை பகுதியில் பூட்டியிருந்த இருந்த வீட்டை உடைத்து தொடர்ந்து நிகழ்ந்து வரும் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.