பெண்ணிடம் இரண்டரை பவுன் நகையை ஏமாற்றி பறித்த போலி வட்டாட்சியர் கைது
சிதம்பரம் அருகே மறைந்த அரசு ஊழியர் மனைவியிடம் பென்ஷன் வாங்கித் தருவதாக கூறி இரண்டரை பவுன் நகையை ஏமாற்றி பறித்த போலி வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே மறைந்த அரசு ஊழியர் மனைவியிடம் பென்ஷன் வாங்கித் தருவதாக கூறி இரண்டரை பவுன் நகையை ஏமாற்றி பறித்த போலி வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் நடராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி இந்திராணி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணவர் பென்ஷன் தொகை பெற விண்ணப்பிக்க வந்திருந்தார்.
அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள இங்கிலி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (38) என்பவர் தான் தனி வட்டாட்சியர் என்றும், கணவரின் பென்ஷனை வாங்கித் தருவதாக கூறி இந்திராணியிடமிருந்து இரண்டரை பவுன் நகையை ஏமாற்றி வாங்கிக் கொண்டு தலைமறைவானார்.
இதுகுறித்து இந்திராணி கடந்த 16-8-2013 அன்று சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் வியாழக்கிழமை சிதம்பரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போலி வட்டாட்சியர் பழனிசாமியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் பழனிசாமி பலரிடம் வட்டாட்சியர் எனக்கூறி பணம் வசூலித்ததை தெரியவந்துள்ளது.