வேலை வாங்கித் தருவதாக மோசடி: அரசு பள்ளி ஆசிரியை கணவர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியையின் கணவரை ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக திண்டுக்கல் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியையின் கணவரை ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த முத்தையன் மகன் அழகர்ராஜா. இவர், பி.பார்மஸி படித்து விட்டு வேலை தேடி வந்தாரம். அழகர்ராஜாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக் கூறி ஆண்டிபட்டி, காமராஜர்நகரைச் சேர்ந்த திண்டுக்கல் மாவட்டம், விருவீடு அரசு பள்ளியில் ஆசிரியை புஷ்பராணி, அவரது கணவர் பிரசாத் ஆகியோர் பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும், வங்கி காசோலையாகவும் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
வேலை வாங்கித் தர காலதாமதம் ஏற்பட்டதால் பணத்தை திரும்ப தருமாறு கேட்டதற்கு, பிரசாத் அளித்த காசோலை வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு புஷ்பராணி, பிரசாத் ஆகியோர் முறையாக பதில் கூறாமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்ததாக ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் அழகர்ராஜா புகார் அளித்தார்.
Advertisement
இந்தப் புகாரின் அடிப்படையில், புஷ்பராணி, பிரசாத் ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் நல்லு வழக்கு பதிந்து, பிரசாத்தை கைது செய்தார்.