சிவகிரி உள்பட 5 இடங்களில் சோதனைச் சாவடி
திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி, கங்கைகொண்டான் உள்பட 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிவகிரி, கங்கைகொண்டான் உள்பட 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினம் இம் மாதம் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நினைவு தினத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், வேலாயுதபுரம், சிவகிரி, இளையரசனேந்தல், கரட்டுமலை ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை முதல் காவல் சோதனை சாவடி தொடங்கப்படுகிறது.
இவற்றில் வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பணியில் இருப்பார்கள்.
இவர்கள் வாடகை வாகனங்களில் யாராவது தொண்டர்கள் வந்தால் அதை சோதனை செய்து, பின் அவர்கள் வந்த வாகனம் வாடகை வாகனம் என்று கண்டறியப்பட்டால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அவர்கள் செல்லும் வாகனத்தில் எல்லா அசல் ஆவணங்களையும் தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.
இந்தச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களை வீடியோவில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.