சிதம்பரம் அருகே முதலை கடித்து மூவர் படுகாயம்: எம்எல்ஏ ஆறுதல்
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது முதலை கடித்து காயமுற்ற தீத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேரை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ திங்கள்கிழமை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது முதலை கடித்து காயமுற்ற தீத்துக்குடியைச் சேர்ந்த மூன்று பேரை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ திங்கள்கிழமை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே உள்ள தீத்துக்குடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகசாமி(35) கோவிந்தராஜ் (35) பாலமுருகன்(22) ஞாயிற்றுகிழமை கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது முதலை கடித்து காயமுற்றனர். அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீடு திரும்பிய மூவரையும் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மூவருக்கும் உடலில் காயம் அதிகம் உள்ளதால் மீண்டும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொள்ள கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஏற்பாடு செய்தார். பின்னர் வனத்துறையினரை செல்போனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்.
இதனை அடுத்து கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏவிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், தாங்கள் முதலை அட்டகாசத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கால்நடைகளும் இறந்துள்ளன. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளதால் மக்களை ஒருங்கிணைத்து விரைவில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர். அப்படி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், தான் ஆதரவு தெரிவிப்பதாக கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார். எம்எல்ஏவுடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலையரசன், கௌதமன், திருப்பதி, சந்தானகுமார், தேமுதிக கிளைச் செயலாளர் மணிசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமராட்சி ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.