கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிர்ப்பு: வாகனங்கள் சிறைபிடிப்பு
காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் கொள்ளிடம் ஆற்றில் தானே புயல் சிறப்பு திட்டத்திற்காக மணல் அள்ளுவதற்காக திறக்கப்பட்ட மணல் குவாரி பொதுமக்கள் எதிர்பபினால் வெள்ளிக்கிழமை
காட்டுமன்னார்கோயில் அருகே ஓமாம்புலியூரில் கொள்ளிடம் ஆற்றில் தானே புயல் சிறப்பு திட்டத்திற்காக மணல் அள்ளுவதற்காக திறக்கப்பட்ட மணல் குவாரி பொதுமக்கள் எதிர்பபினால் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஓமாம்புலியூர் மணல் குவாரியில் தானே புயல் சிறப்பு திட்டத்தின் கீழ் மணல் அள்ளுவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஆயிரக் கணக்கான வாகனங்களில் மணல் அள்ளுவதற்கு அங்கு வந்ததால், ஊரின் மயானப் பாதை சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளக்கூடாது என வலியுறுத்தி வாகனங்களை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் லாரி ஓட்டுநர்கள் பொதுமக்களை சமரசப்படுத்தி மணல் அள்ளவில்லை எனக்கூறிவிட்டு அருகாமையில் குணவாசல் எழுமிடத்தில் மணல் அள்ளியுள்ளனர்.
குணவாசல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஓமாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் குவாரியை மூட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து மணல் குவாரி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
மேலும் தானே புயல் சிறப்பு திட்டத்தின் கீழ் மணல் அள்ளுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதால், அதிகளவு மணல் அள்ளப்பட்டு அப்பகுதியில் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. எனவே கனிமவளத்துறையினர் கொள்ளிடக்கரையில் மணல் அள்ளுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.