சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதல்
இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே சவ ஊர்வலத்தில் சென்ற ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை விடுதலைச்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் வியாழக்கிழமை சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே சவ ஊர்வலத்தில் சென்ற ஒருவர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக வழக்குப் பதிந்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வெள்ளிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு கிராமத்தில் வியாழக்கிழமை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேலுசாமி (55) என்பவர் இறந்துள்ளார். அவரது உடலை எப்போதும் மயானத்திற்கு எடுத்துச் செல்லும் பொதுவழியில் அவரது குடும்பத்தாரும், உறவினர்களும் எடுத்துச் சென்றுள்ளனர். ஊர்வலத்தில் மாலையில் உள்ள பூவை சாலையில் பிரித்து போட்டுவிட்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிலர் பூவை இங்கே போடாமல் செல்லுங்கள் எனக்கூறியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கு ஏற்பட்ட தகராறில் சவ ஊர்வலத்தில் வந்த மாயகிருஷ்ணன் என்பவர் உருட்டை கட்டையால் எதிர்தரப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஊர்வலத்தில் சென்றவர்கள் சமரசம் செய்ததால் அமைதியாக உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த பாத்தீபன் என்ற மாணவர் பள்ளி செல்வதற்காக கரைமேடு பஸ்நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தில் உள்ள எதிர்தரப்பைச் சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட சிலர் ஏன் இங்கே வந்து நிற்கிறாய் என கேட்ட போது ஏற்பட்ட தகராறில் மாணவர் பார்த்தீபன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து எதிர்தரப்பைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வடலூருக்கு வேலைக்கு சென்றபோது அவரை மற்றொரு தரப்பினர் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதுகுறித்து வெங்கடேசன் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவர் பார்த்தீபன் தாக்கப்பட்டது குறித்து அவரது சித்தப்பா மணிவாசகன் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டு இன்ஸ்பெக்டர் ஆல்பர்ட் வில்சனிடம் முறையிட்டனர். பின்னர் காவல் நிலையத்திற்கு வெளியே குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமமூர்த்தி கரைமேடு கிராமத்திற்கு சென்று நடைபெற்ற மோதல் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் கரைமேடு கிராமத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.