விசாரணைக் கைதி மரணம் : அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல்
விசாரணைக் கைதி முருகன் மரணம் அடைந்த சம்பவத்தில் அவரது உறவினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணைக் கைதி முருகன் மரணம் அடைந்த சம்பவத்தில் அவரது உறவினர்கள் மற்றும் அனைத்துக் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை - கும்பகோணம் சாலையில் மருத்துவமனைக்கு எதிரே திமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் வியாழக்கிழமை மதியம் கண்டன ஆர்ப்பாட்டமும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை அருகே உள்ள நான்கு முனை சந்திப்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முருகனின் பிரேதத்தை பார்த்து விசாரணை நடத்தி வருகிறார். இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான போலீஸா குவிக்கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி பேருந்து நிலைய பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் தரகு வேலை செய்து வந்தவர் முருகன் (40). வடலூரில் வசித்து வந்த இவருக்கு மனைவி வாசுகி (34) மகள் அபி(10), மகன் சுரேஷ் (8) ஆகியோர் உள்ளனர்.
கடந்த திங்கள் அன்று, முருகனை லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வாசுகியின் சகோதரர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு முருகனை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்காக முருகனை போலீஸார் பண்ருட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அவரை இரவு போலீஸார் விசாரித்ததாகத் தெரிகிறது. அப்போது முருகன் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடல் பண்ருட்டி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த முருகன் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத் தக்கது.