முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

திருமாவளவன் மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலுவடைந்து விடக்கூடாது என வன்முறையை தூண்டிவிடுகின்றனர். எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்டுப்பாட்டை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருமாவளவன் மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலுவடைந்து விடக்கூடாது என வன்முறையை தூண்டிவிடுகின்றனர். எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் பொன்மணி அரங்கம் மற்றும் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ரெ.இளமதி, ஆ.தமிழ்க்குமரன் ஆகியோர் இல்ல திருமண நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசியதாவது:

விழுப்புரம் மண்ணை மிதிக்க எனக்கு தடை விதித்திருந்தனர். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு வர வேண்டும் என்ற காரைவிட்டு கீழே இறங்காமல் வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். 2 வருடங்களாக 4500 பேர் படுகொலை நடைபெற்றுள்ளது. குற்றங்களை தடுக்க முடியவில்லை. ஆனால் திருமாவளவனை தடுக்கின்றனர். சிதம்பரம் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் பேனர் வைக்கக்கூடாது என தடை விதித்துள்ளனர். அம்மா பேனர் வைக்க அனுமதியளிக்கின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் பேனர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். ஆனால் திருமாவளவனுக்கு பேனர் வைக்கக்கூடாது என தடை விதிக்கின்றனர். இன்றும் இந்த சமூத்தில் அடக்குமுறை, ஒடுக்குமுறை உள்ளதை காட்டுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு கூட எனக்கு கொடுப்பதில்லை. இந்தியாவிலேயே இப்படிப்பட்ட கேவலமான மாநிலமாக தமிழகம் உள்ளது. கேவலமான அணுகுமுறை தமிழ்நாட்டை தவரி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. ஒடுக்கப்படுவதை தடுக்க அரசியல் சக்தியாக எழுச்சி பெற வேண்டும். ஓட்டுக்காக என் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகிறார்கள். ஆவேசப்படுவதும், ஆத்திரப்படுவதும் போர் குணம் அல்ல. ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்கு பின் வாங்காமல் போராடுவதுதான் போர் குணம். சிதம்பரம் தொகுதியில் நான் நிற்க போவதில்லை என வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

நான் சிதம்பரம் தொகுதியில்தான் நிற்பேன். விடுதலைச் சிறுத்தைகள் சிதம்பரம் தொகுதியில்தான் நிற்போம். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். தோற்றுவிட்டால் வருத்தப்படுபவன் நான் அல்ல. எனக்கு வேண்டுபவர்கள், வேண்டாதபவர்கள் என்றும் யாரும் இல்லை. என்னை ஜெயலலிதாவிற்கும், மூப்பனாருக்கும் பிடிக்கும். அதனால்தான் முதல்வர் ஜெயலலிதா அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய போதுகூட, அன்புதம்பி எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறினார் என தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் தொல்.திருமாவளவன் எம்பி சிதம்பரம் அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன், நிர்வாகிகள் கோ.நீதிவளவன், ரா.காவியச்செல்வன், குறிஞ்சிவளவன், பால.அறவாழி, அதியமான், கொடிப்பள்ளம் முத்தையா, பேரிவளவன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, நகர அமைப்பாளர் ஆதிமூலம், தாய்மண் மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.