இலங்கைக்கு எதிராக தனியொரு தீர்மானத்தை இந்தியாவே இயற்றி இருக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
இலங்கைக்கு எதிராக ஐ.நா., கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் மத்திய அரசு விட்டுவிட்டது சரியல்ல. தனியொரு தீர்மானத்தையே இந்தியா இயற்றி இருக்க வேண்டும் எ
இலங்கைக்கு எதிராக ஐ.நா., கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்காமல் மத்திய அரசு விட்டுவிட்டது சரியல்ல. தனியொரு தீர்மானத்தையே இந்தியா இயற்றி இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செவ்வாய் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி.ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் 18 தொகுதிகளைத் தவிர திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல் தொகுதிகளில் மதச் சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களை அதரித்துப் பிரசாரம் செய்கிறோம். மற்ற தொகுதிகளில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு யாரை ஆதரிப்பது என்று இடதுசாரி கட்சிகள் அறிவிக்கும்.
பாஜக தேர்தல் அறிக்கையில் சாமான்ய மக்களுக்கு நலன் பயக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு விசேஷ அந்தஸ்து, அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகவே உள்ளது.
பாஜக, காங்கிரஸþக்கு மாற்றாக நடைபோடுவது இடதுசாரிகள் தான். திமுகவோ, அதிமுகவோ அல்ல. திருவண்ணாமலை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வோம். இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரிக்காமல் மத்திய அரசு விட்டுவிட்டது சரியல்ல. இந்தியா தனியாக ஒரு தீர்மானத்தையே இயற்றி இருக்க வேண்டும்.
திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பது போன்ற மக்கள் நலனை பாதிக்கும் திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றார்.
பேட்டியின் போது, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.வீரபத்திரன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.சிவக்குமார், எம்.பிரகலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.