ஊழல் பணம் வெள்ளமாக பாய்ந்தாலும் மக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள்: வைகோ
விருதுநகர் மக்களவை தொகுதியில் ஊழல் பணம் கங்கை வெள்ளமாக பாய்ந்தாலும் பொதுமக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என மதிமுக
விருதுநகர் மக்களவை தொகுதியில் ஊழல் பணம் கங்கை வெள்ளமாக பாய்ந்தாலும் பொதுமக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
விருதுநகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் வைகோ சனிக்கிழமை அய்யனார் காலனி பொதுமக்களிடையே ஆதரவு கேட்டு பேசியதாவது: புதிய வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் தான் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். இந்த வாக்காளர்கள் தான் வெற்றியை நிர்ணயிக்கப்போகிறார்கள். நான் பொறுப்பில் இருந்த போது பல்வேறு சேவைப்பணிகளை செய்துள்ளேன்.
தாய்மார்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளுக்கு மஞ்சள்காமலை தடுப்பு ஊசி 3 முறை போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதேபோல், 25 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து நடமாட வைத்துள்ளேன். இதெல்லாம் எனது சொந்தப் பணத்திலிருந்து தான் செய்தேன். தற்போது, ஆளுங்கட்சியினர் ஒரு வாக்குக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க தயராகிவிட்டனர். அதேபோல் ஆண்ட கட்சியினரும் கொடுக்கப்போவதாகவும் பல்வேறு கிராமங்களில் இருந்து தகவல் வருகிறது.
Advertisement
அப்படியானல் உண்மை, உழைப்புக்கு வாக்கு இல்லையா, ஏமாற்றுகிறவர்களுக்கு தான் உங்கள் வாக்கா. உங்களை பணம் கொடுத்து 5 ஆண்டுகளுக்கு விலைக்கு வாங்கப் போகிறார்கள். நீங்கள் யாருக்காகவும் விலை போகமாட்டீர்கள் என நம்புகிறேன். இதை ஒவ்வொரு 18 வயது பூர்த்தியடைந்த கல்லூரி மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துரைக்க வேண்டும். இதுகுறித்து தலைமைத்தேர்தல் அலுவலர் பிரவீன்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளேன். இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா என்றால் இல்லை. அதனால் இந்த மக்களவை தேர்தலில் ஊழல் பணம் கங்கை வெள்ளமாக பாய்ந்தாலும் நிச்சயமாக பொதுமக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என நம்புகிறேன்.
தமிழகத்தில் சாரயக்கடைகளை ஒழிப்பதற்காக வெய்யிலும், மழையிலும் நடையாய் நடந்தேன். இதெல்லாம் யாருக்காக பெண்கள் நனறாக இருக்கனும், குடும்பத்தில் உள்ளவர்கள் குடிகாரர்களாக ஆகிவிடக் கூடாது. அதோடு, பெண்கள் பாதுகாப்புடன் நடமாட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தான் நடந்தேன். அதனால் உண்மை, உழைப்பு, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என வைகோ பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இதேபோல், விருதுநகர் நகராட்சி பகுதியில் புல்லலக்கோட்டை சாலை, அகமது நகர், பாத்திமா நகர், அய்யனார் காலனி, பர்மா காலனி, ஆத்துப்பாலம், மருளூத்து, பெரிய மருளூத்து, பட்டம்புதூர், வச்சக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நேரில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வரதராஜன், நகர செயலாளர் ராமர், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.