விருதுநகர் மாவட்டத்தில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை
விருதுநகர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் வளர்ச்சி மன்ற அரங்கில் நடந்த பயிற்சி முகாமிற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். மக்களவை தொகுதி மேற்பார்வையாளர் அனில்குமார் பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 1711 வாக்குச்சாவடி மையங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், பதற்றமானதாக 65 வாக்குச்சாவடிகள் மையங்கள் கண்டறியப்பட்டு, இங்கு பணியாற்றுவதற்காக நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பணியாளர்கள் வாக்குச் சாவடி மையங்களில் அன்றைய நாளில் காலை 6 மணிக்கே வாக்கு பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் இருக்க வேண்டும். அதையடுத்து, தொடர்ந்து மாலை வரையில் வாக்கு பதிவு பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கிடையே எதேனும் அசம்பாவிதம் நடந்தால் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
Advertisement
மேலும், அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களாக இருந்தால் காலை 6 மணிக்கு பணியாளர்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், தூரமாக இருந்தால் அதற்கு முதல்நாள் இரவே சென்று சேர வேண்டும். எங்கு தேர்தல் பணி கொடு்த்தாலும் அலுவலர்கள் பணியாற்ற தயராக இருக்க வேண்டும். இப்பணியாளர்கள் எந்தெந்த வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றவுள்ளனர் என்கிற விவரம் குறி்த்து 23-ம் தேதி உத்தரவில் தெரிவிக்கப்படும் என மக்களவை தொகுதி மேற்பார்வையாளர் அனில்குமார் தெரிவித்தார்.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கொங்கன், நேர்முக உதவியாளர்(தேர்தல் பிரிவு) பவானி ஜீஜா மற்றும் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.