நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை
திருநெல்வேலி அருகே கரையிருப்பில் மணல் அள்ளுவது தொடர்பாக எழுந்த மோதலில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்
திருநெல்வேலி அருகே கரையிருப்பில் மணல் அள்ளுவது தொடர்பாக எழுந்த மோதலில் இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி தாழையூத்து அருகே உள்ள கரையிருப்பு வடக்கூரைச் சேர்ந்த சிவனுபாண்டி மகன் சித்திரைகுமார் (35). இவரது சகோதரர் சுப்பிரமணியன் (30). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் மண் அள்ளுவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதில் இருதரப்பினரும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த சித்திரைகுமார், சுப்பிரமணியன், மற்றொரு தரப்பைச் சேர்ந்த கரையிருப்பு சுகுமார் மகன் செந்தில்குமார் (36), பேச்சிமுத்து மகன் முருககுட்டி (50), சரவணகுமார் (22), மாயாண்டி மகன் காந்திமணி (38) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால், வழியிலேயே சித்திரைகுமார் இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.