முகப்பு
தற்போதைய செய்திகள்

144 தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ வலியுறுத்தல்

இன்று மாலை (22-4-2014) 6 மணி முதல் வியாழக்கிழமை (24-4-2014) காலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:04 AM
பகிர்:

இன்று மாலை (22-4-2014) 6 மணி முதல் வியாழக்கிழமை (24-4-2014) காலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

144 தடை உத்தரவை வாபஸ் பெறுமாறு தேர்தல் ஆணைய அதிகாரி பிரவீண்குமாரிடம் அக்கட்சியின் மாநிலங்களை எம்பி டி,கே ரங்கராஜன் கடிதம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில்  மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

பொதுவாக, இதுபோன்ற தடை உத்தரவுகள், அசாதாரண காலங்களில்  அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு குலையும்போது, அமைதியை நிலை நாட்டவும், சட்டவிதிகள் மீறலைக் கட்டுக்குள் கொண்டு வரவும் பிறப்பிக்கப்படுகிற உத்தரவுகள் ஆகும்.

ஆனால், தேர்தல் காலங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அது சாதாரண ஜனநாயக செயல்பாட்டை முடக்குவதுடன், நியாயமான தேர்தல் சார்ந்த பணிகளைச் செய்வதற்கும் தடையாக இருக்கும். மேலும், சட்டத்தை அமல்படுத்துகிற இடத்தில் உள்ள காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள், இதுபோன்ற தடை உத்தரவுகள் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் வாய்ப்பினை உருவாக்கும்.

தேர்தல் என்பதே ஜனநாயகச் செயல்பாட்டின் உச்சமாக இருக்கும்போது - ஜனநாயகச்  செயல்பாட்டை முடக்குகிற எந்த நடவடிக்கையும் தேர்தலுடன் இணைந்து செல்ல முடியாது. என்ன நியாயம் கூறினாலும், தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதை ஜனநாயகத்தை நேசிக்கிற இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாது.

எனவே, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி  ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்திட வேண்டுமெனவும், பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரங்கராஜன்,  தேர்தல் ஆணையரிடம் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →