ஸ்ரீமுஷ்ணம் அருகே கிருஸ்துவ ஆலயத்தில் பாதிரியார் மர்மசாவு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கிருஸ்துவ ஆலய வளாகத்தில் பாதிரியார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கிருஸ்துவ ஆலய வளாகத்தில் பாதிரியார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுக்கா ஆனிக்குறிச்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ் மகன் ஜேம்ஸ் (36). இவர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே புதுக்குப்பத்தில் உள்ள புனித நூர்து அன்னை கிருஸ்துவ ஆலயத்தில் 3 ஆண்டுகளாக பாதிரியாராக உள்ளார். இவர் ஆலய வளாகத்தில் உள்ள விருந்தினர் விடுதி அறையில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் புதன்கிழமை காலை ஆலயத்திற்கு பாதிரியார் ஜேம்ஸ் வரவில்லை. இதனால் ஆலயத்திற்கு வந்தவர்கள் பாதிரியார் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்த போது அறை கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்தது. கதவை தட்டியும் நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த மக்கள் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாதிரியார் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகாமையில் இறந்து போன தேள் ஒன்று பொட்டலமாக மடிக்கப்பட்டு கிடந்தது. டிஸ்போஸல் கப்பும், விஷமும் கிடந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் ஆலயத்திற்கு வருபவர்களும் பாதிரியார் சாவில் மர்மம் உள்ளது என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
இதனையடுத்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுரேஷ்பாபு, ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.