மாணவர் மரணத்துக்குக் காரணமான ஆம்னி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல்
பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக்கல்லூரி மாணவரின் மரணத்திற்கு காரணமான தனியார் ஆம்னி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் புதன்கிழமை சட்டக்கல்லூரி மாணவரின் மரணத்திற்கு காரணமான தனியார் ஆம்னி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஐகோர்ட்ராஜா (25). இவர் திருநெல்வேலி சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். ஐகோர்ட்ராஜா சில தினங்களுக்கு முன் பாளையங்கோட்டை துதியன்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஐகோர்ட்ராஜா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவரின் மரணத்திற்கு காரணமான ஆம்னி பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆம்னி பேருந்து ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். விபத்தில் இறந்த மாணவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி திருச்செந்தூர் பிரதான சாலையில் சட்டக் கல்லூரி முன் நடைபெற்ற மறியலில் 250 க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர். அரை மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்ஆய்வாளர் தில்லைநாகராஜன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடு்க்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் மறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.