நெல்லையில் மதுக்கூடங்களில் திடீர் சோதனை: 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலிருந்து துணிப்பைகளை எடுத்துச் சென்று பொருள்களை வாங்கத் தொடங்கினர். ஆனால், அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தது. இதையடுத்து அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி சாதாரண கூட்டத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மேயர் (பொ) பூ.ஜெகநாதன் என்ற கணேசன் பதிலளிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து ஏற்கெனவே உள்ள பிளாஸ்டிக் பொருள்களை 18 ஆம் தேதிக்குள் அப்புறப்படுத்த அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை, உடையார்பட்டி, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடங்களில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் பாலகணேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் சாகுல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உடன்சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநராட்சி அலுவலர்கள் 3 குழுக்களாக திங்கள்கிழமை பிரிந்து சென்று 11 டாஸ்மாக் மதுக்கூடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 750 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும். 40 மைக்ரான் அளவுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது. 40 மைக்ரானுக்கு மேல் உள்ளவையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிப்பெற்றே விற்பனை செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் அடுத்தக்கட்டமாக அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதன்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோருக்கு ரூ.100-ம், விற்பனையாளருக்கு ரூ.500-ம், உற்பத்தியாளருக்கு ரூ.1000-ம் அபராதமாக விதிக்கப்படும் என்றனர்.