திருநெல்வேலி பாலபாக்யா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள பாலபாக்யா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள பாலபாக்யா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பு அருகே பாலபாக்யா நகர் 3 ஆவது தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (62). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது 2 மகள்களும் திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமசாமி தனது மனைவியுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றாராம்.
பின்னர் இருவரும் வியாழக்கிழமை காலை திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 8 பவுன் தங்கநகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
தகவலறிந்ததும் தடயவியல் நிபுணர்கள் வந்து விரல் ரேகைகளைப் பதிவு செய்தனர். திருநெல்வேலி சந்திப்பு குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.