விருதுநகர் நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாத மகப்பேறு மருத்துவமனை செயல்பட தொடங்கியது
விருதுநகர் நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாத மகப்பேறு மருத்துவமனை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாத மகப்பேறு மருத்துவமனை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சியில் 26-வது வார்டில் செந்திவிநாயகபுரம் பகுதியில் ச.வெ.அண்ணாமலையம்மாள் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையின் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த கட்டையாபுரம் உள்பட 4 வார்டு பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர். அதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர் பற்றாக்குறையால் மகப்பேறு மருத்துவமனையின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர். அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கு பிறகு செயல்பட வைப்பதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. மேலும், இம்மருத்துவமனையை சீரமைப்பதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகள், சுற்றுச்சுவர் மற்றும் படுக்கை வசதிகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
தற்போது, நகராட்சி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், அரசு மருத்துவமனை நிர்வாகம் மூலம் மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் இரண்டு மருத்துவர், செவிலியர், உதவி செவிலியர், துப்புரவு பணியாளர், ஆய்வுக்கூட நுட்பனர் உள்ளிட்டோர் நியமித்து பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையின் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி தலைமை வகித்தார். மருத்துவத்துறை இணைஇயக்குநர் கதிரேசன் முன்னிலை வகித்தார். இதில், நகராட்சி தலைவர் மா.சாந்தி கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட மருத்துவமனையை தொடங்கி வைத்தார். இதில், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், அதிமுக நகரச் செயலாளர் மற்றும் உறுப்பினர் முகமது நெயினார், அப்பகுதி நகராட்சி உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.