பண்ருட்டி : 40 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாலையோர புளியமரம்
பண்ருட்டி அருகே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த போது, அங்கிருந்த புளியமரத்தின் கிளை பேருந்தை தாங்கிப் பிடித்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பண்ருட்டி அருகே அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த போது, அங்கிருந்த புளியமரத்தின் கிளை பேருந்தை தாங்கிப் பிடித்ததில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் போக்கவரத்துக் கழக விரைவுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் 41 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கும்பகோணத்தைச் சேர்ந்த எபினேசர் (55) ஓட்டினார். நடத்துனராக சேகர் (58) என்பவர் இருந்தார்.
இந்த பேருந்து பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்தது.
அப்போது, சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் கிளை ஒன்று, பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால், அதில் சிக்கிக் கொண்ட பேருந்து பள்ளத்தில் விழாமல் தொங்கியபடி நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.
பேருந்தில் இருந்த 41 பேரின் உயிரையும், சாலையோரம் இருந்த புளியமரம்தான் காப்பாற்றியுள்ளது. அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பிறகுதான் சென்னை - கும்பகோணம் இடையேயான சாலைப் போக்குவரத்து துவங்கியது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தை தாசில்தார் மோகன், பராம்புலியுர் ஆய்வாளர் முருகேசன் பார்வையிட்டனர்.
பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.