விருதுநகர்-திருநெல்வேலி இடையேயான மின்பாதையில் பயணிகளுடன் ரயில்களை இயக்க இன்னும் இரு வாரங்களில் முறையான அனுமதி அளிக்கப்படும். டிசம்பர் இறுதிக்குள் இப் பாதையில் மின்சார என்ஜின்களின் மூலம் ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது என்றார் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (தென்மண்டலம்) சதிஷ்குமார் மிட்டல்.
விருதுநகர்-நெல்லை இடையேயான மின்பாதையை 2 ஆவது நாளாக வியாழக்கிழமை ஆய்வு செய்த சதிஷ்குமார் மிட்டல் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகரில் இருந்து நெல்லை வரை தொழில்நுட்ப மற்றும் ரயில்வே ஊழியர்களுடன் புதன்கிழமை ஆய்வு செய்தேன். 2 ஆவது நாளாக இன்று ரயில் என்ஜினின் பைலட்டுடன் அமர்ந்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தேன். மிகவும் சில மாற்றங்கள் மட்டும் ஒரு சில பகுதிகளில் தேவைப்படுகிறது. அதுகுறித்து அறிவுறுத்தியுள்ளேன். மற்றபடி இந்த ஆய்வும், மின்பாதையும் திருப்திகரமாக உள்ளது.
இதுகுறித்த ஆய்வறிக்கை ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும். தொடர்ந்து இன்னும் இரு வாரங்களில் விருதுநகர்-நெல்லை இடையேயான மின்பாதையில் மின்சார என்ஜினின் உதவியோடு பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும் என்றார் அவர்.
100 முதல் 110 கி.மீ. வேகத்தில்: இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: மதுரையிலிருந்து-நாகர்கோவில், மணியாச்சி-தூத்துக்குடி வரையில் 237 கி.மீ. தொலைவு ரயில்பாதையை ரூ. 175 கோடி மதிப்பில் மின்மயமாக்கும் பணி கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இப் பணிகள் முடிந்து விருதுநகர்-திருநெல்வேலி இடையே கடந்த 7 ஆம் தேதி மின்சார ரயில் என்ஜின் மட்டும் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்பின்பு ரயில் இயக்க அனுமதி பெறுவதற்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்துள்ளார்.
2 ஆவது நாளாக இன்று காலை விருதுநகர்-தூத்துக்குடி இடையேயான பாதையை 85 நிமிடங்களிலும், தூத்துக்குடி-திருநெல்வேலி இடையேயான பாதையை 50 நிமிடங்களிலும் மின்சார ரயில் கடந்துள்ளது. சுமார் 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையம் தான் இந்தப் பாதையில் எவ்வளவு கி.மீ. வேகத்தில் மின்சார ரயிலை இயக்க வேண்டும் என்று இறுதியாக முடிவு செய்யும்.ரயில்களின் மின்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் ஏற்கெனவே துணைமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாஞ்சிமணியாச்சியில் கூடுதலாக ஒரு துணைமின் நிலையத்தை அமைக்கும் பணி மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை நடைபெறும் சோதனை ஓட்டத்தின் போது விருதுநகர்-தூத்துக்குடி-திருநெல்வேலி மின்சார ரயில்பாதையில் அருகே செல்ல வேண்டாம் எனவும், ஆளில்லா லெவெல் கிராசிங்குகளை கடக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், ரயில்வே ஊழியர்களின் கண்காணிப்பு காரணமாகவும் ஆய்வுப்பணி மிகவும் சிறப்பாக முடிவடைந்துள்ளது என்றனர்.
6 ரயில்களின் பயண நேரம் குறையும்:இதுதொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் பொதுமேலாளர் ரஸ்தோகி கூறுகையில், விருதுநகர்- நெல்லை, வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி இடையேயான மின்சார ரயில்பாதைக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் டிசம்பர் இறுதி வாரம் முதல் தென்பகுதியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கிய ரயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படும். அதன்படி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை-திருச்சி இன்டர்சிட்டி ரயில், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 6 ரயில்களும் முதல்கட்டமாக மின்மயமாகும். இதனால் சென்னைக்கு செல்லும் பயண நேரம் ஒரு மணி நேரத்துக்கு மேல் குறையும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.