வீராணம் ஏரியில் 2.15 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் மீனவளத்தை பெருக்கும் வகையில் 2.15 லட்சம் மீன்குஞ்சுகளை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை ஏரி தண்ணீரில் விட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் மீனவளத்தை பெருக்கும் வகையில் 2.15 லட்சம் மீன்குஞ்சுகளை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை ஏரி தண்ணீரில் விட்டார்.
தமிழ்நாடு அரசு உள்நாட்டு மீன்வள மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் வலைகள் வழங்குதல், மிதவை கூடுகளில் மீன் வளர்த்தல், பண்ணை குட்டையில் மீன்வளர்க்கும் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் மானியம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் லால்பேட்டை, உடையார்குடி, சித்தமல்லி, புடையூர், ஓமாம்புலியூர் மற்றும் சேத்தியாத்தோப்பு கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தினமும் மீன் பிடிப்பின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இவர்களின் மேம்பாட்டிற்காக வீராணம் ஏரியில் மீன்வளத்துறையின் மூலம் ஆண்டு தோறும் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன.
Advertisement
தற்போது வீராணம் ஏரியில் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளதால், மீன்குஞ்சுகள் இருப்பு செய்ய இதுவே உகந்த காலமாகும். எனவே தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி உதவித்திட்டத்தின் மூலம் 2014-15 ஆண்டிற்கு பெருரக மீன்குஞ்சு விரலிகள் 12.15 லட்சம் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சனிக்கிழமை வீராணம் ஏரியில் 2.25 லட்சம் மீன்குஞ்சுகளை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விட்டு, பணியினை தொடங்கி வைத்தார். இதில் கட்லா, ரோகு, மிஸ்கால், புல்கெண்டை, சில்வர் கெண்டை மீன் இன வகைகள் விடப்பட்டன. மேலும் தொடர்ந்து 10 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.