த.மா.க மூலம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு உறுப்பினர் சேர்க்கை தொடர்பான பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, விருதுநகரில் அவரது ஆதாரவாளர்களான ஐ.என்.டி.யு.சி பாலசுப்பிரமணியம், நகராட்சி உறுப்பினர் பழனிவேல், சிவகுருநாதன் உள்ளிட்டோர் திரளாக நின்று வரவேற்பளித்தனர். அதையடுத்து, விருதுநகர் தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜரின் நினைவு இல்லத்திற்கு சென்று, காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:
விருதுநகர் காமராஜர் இல்லத்திற்கு வந்து அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதை தொடர்ந்து செய்து வருகிறோம். பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்திற்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். அதேபோல், எளிமை, நேர்மை, தூய்மையாகவும் ஆட்சி தந்துள்ளார். அதன் மூலம் கல்வி, தொழில், விவசாயம் ஆகியவைகளில் முதன்மையான மாநிலமாகவும் விளங்கியது. அதன் அடிப்படையில் காமராஜரின் வழியில் த.மா.கவை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம்.
தற்போது, மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதில், 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதில், முன்னாள் மாநில தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் விஸ்வநாதன், சித்தன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான ராஜகோபால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.