பழனியருகே வனவிலங்குகள் ஏற்பட்ட சேதத்துக்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கல்
பழனியருகே வனவிலங்குகளால் ஏற்பட்ட சேதத்துக்கு வனத்துறை சார்பில் புதன்கிழமை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
பழனியருகே வனவிலங்குகளால் ஏற்பட்ட சேதத்துக்கு வனத்துறை சார்பில் புதன்கிழமை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவாரத்தில் பலநூறு ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. சமீபத்தில் ஏற்பட்ட வறட்சியின் போது காட்டுயானை, பன்றிகள் மலையடிவாரத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து ஏராளமான பொருட்சேதத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பயிர்சேதம் ஏற்பட்டவர்கள் வனத்துறை அதிகாரிகளை அணுகி இழப்பீடுகள் கோரி விண்ணப்பங்களை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் கடந்த ஜூலை 2013 முதல் ஏப்ரல் 2014 வரை வரப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் பயிர்சேதம், வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை புதன்கிழமை வனத்துறை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மண்டல வனப்பாதுகாவலர் ஆகாஷ் தீப் பரூவா, மாவட்ட வன அலுவலர் சம்பத் ஆகியோர் உத்திரவின் பேரில் பயனாளிகளுக்கு இழப்பீட்டுக் காசோலைகளை பழனி வனச்சரக அலுவலர் கணேசன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் யானைகளால் பயிர் சேதம் அடைந்த புளியம்பட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன், குதிரையாறு அணைப்பகுதியை சேர்ந்த அம்மாகுளத்தாள், பொருந்தலாறு பகுதியை சேர்ந்த ஈஸ்வரி, புதுஆயக்குடியை சேர்ந்த விஜயராகவன், சிங்காரம், பாலசமுத்திரத்தை சேர்ந்த மயில்சாமி என 6 நபர்களுக்கும், வீடுகள் சேதமடைந்த புளியமரத்துசெட்டை சேர்ந்த ஈஸ்வரன், அய்யம்புள்ளியை சேர்ந்த பஞ்சவர்ணன், முருகன், பாப்பாத்தி, அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் என 5 பேருக்கும், காட்டுப்பன்றியால் துரத்தப்பட்டு காயமடைந்த அய்யம்புள்ளி கர்ணன் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனவர்கள் தாருகாவனன், வெங்கடாசலம் மற்றும் காவலர்கள் பலர் பங்கேற்றனர்.