பழனி அருகே அணையில் விழுந்து காட்டுமாடு பலி
பழனியை அடுத்த மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு போன்ற அணைகள் உள்ளன. இந்த மலைத்தொடர்ச்சியில்
பழனி அருகே தண்ணீர் குடிக்க வந்த காட்டுமாடு அணைக்குள் தவறி விழுந்து இறந்து போனது.
பழனியை அடுத்த மேற்குமலைத்தொடர்ச்சி அடிவாரத்தில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு போன்ற அணைகள் உள்ளன. இந்த மலைத்தொடர்ச்சியில் காட்டுயானைகள், காட்டுமாடு, மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை மழைகாலம் போக மீதி நேரத்தில் குடிநீருக்கு அணைப்பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் குதிரையாறு அணைப்பகுதியில் குடிநீர் குடிக்க வந்த காட்டுமாடு ஒன்று அணையின் சேற்றுப்பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்து போனது.
வெள்ளிக்கிழமை அணைக்குள் காட்டுமாடு இறந்து மிதப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்து இறந்த காட்டுமாட்டின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை வனவர் வெங்கடாசலம் கூறுகையில், இறந்த மாடு சுமார் ஆறு வயதும், ஒருடன் எடையும் கொண்ட ஆண் மாடு ஆகும். அதிக எடையில் மாடு இருந்ததால் கரையில் ஜேசிபி இயந்திரத்தை நிறுத்தி அதன் மூலம் மாட்டை கயிறால் கட்டி கரைக்கு இழுத்து வந்ததாக தெரிவித்தார். மாட்டின் உடல் கால்நடைத்துறை உதவி மருத்துவர் நளினாராணி தலைமையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மாடு தவறி விழுந்து தண்ணீர் குடித்து மூச்சுத்திணறி இறந்ததும், இறந்து ஒரிரு நாட்கள் ஆகியதும் தெரியவந்தது. இறந்த மாடு அதே பகுதியில் இயந்திரம் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே அணையில் மான் ஒன்று தண்ணீர் குடிக்க வந்த போது தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.